வரும் செப்டம்பர் முதல் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கும் வரும் ... ரிசர்வ் வங்கி தகவல்
வரும் செப்டம்பர் மாதம் முதல் ரூ.200 நோட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது.
டெல்லி: புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதால் ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் ரூ 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிய ரூ 500 மற்றும் 2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. இதன் மூலம் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர்.

2000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து தற்போது 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்தது.
இதனையடுத்து கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில், 200 ரூபாய் நோட்டுகள் ஜூலை மாதம் முதல் அச்சிடப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் இருக்கும் என்று தெரிகிறது. ரூ.100-க்கும் ரூ.500-க்கும் இடையில் எந்த நோட்டுகளும் இல்லாததால் ரூ. 200-ஐ அச்சிட முடிவு செய்த மத்திய அரசு தற்போது புழக்கத்தில் விட தயாராகிவிட்டது.












Click it and Unblock the Notifications