21 மாதங்களில் இல்லாத அளவு அத்தியாவசிய பொருள் விலையேற்றம்.. என்ன செய்யப்போகிறது அரசு?
டெல்லி: சில்லரை விலை பண வீக்கம் கடந்த மாதத்தில் 5.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம் இது 5.39 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இதில் காய்கறிகள் விலைதான் கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 4.82 சதவீதமாக இருந்த காய்கறி விலை, மே மாதத்தில் 10.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், பருப்பு வகைகள் விலை மட்டுமே ஓரளவுக்கு குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 34.13 சதவீதத்தில் இருந்து 31.57 சதவீதமாக குறைந்துள்ளது.
முட்டை விலை ஏப்ரலில் 6.64 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதம் 9.13 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உணவு பொருள் விலைவாசி என்று எடுத்து பார்த்தால், அது 7.55 சதவீதமாக உள்ளது. முந்தைய மாதம் இது 6.32 சதவீதமாகத்தான் இருந்தது.

கடந்த மாதத்தில் சில்லரை விலை பண வீக்கம் 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது. இதற்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்று விடை தருகிறது அந்த புள்ளி விவரம்.
இதுபோல விலைவாசி உயர்ந்து கொண்டிருந்தால், ஜூன் மாதமும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது என்று வந்த தகவல்கள் இந்த அச்சத்தை உறுதி செய்கின்றன.
இவ்வாண்டு பருவமழை சிறப்பாக பெய்து உணவு தானிய விளைச்சல் அமோகமாக இருந்தால் மட்டுமே நடுத்தர, ஏழை, எளிய மக்களை விலைவாசி பிடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று கை பிசைகிறது அரசு.
விலைவாசி இப்படி ஏறிக்கொண்டிருந்தால், வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முன்வர வாய்ப்பில்லை என்று மற்றொரு குண்டை தூக்கி போடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications