மோடியும், அமித்ஷாவும் வங்கிக் கணக்கை காட்டுவார்களா… மம்தா சவால்
பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் வங்கிக் கணக்கைக் காட்டுவார்களா என்று மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
லக்னோ: பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக, பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தங்களது வங்கிக் கணக்குகளை காட்டத் தயாரா என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் சமாஜவாதி கட்சியுடன் இணைந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை பேரணி ஒன்றை நடத்தியது.

இந்தப் பேரணியில் பங்கேற்று மம்தா பேசியதாவது:
இந்திய பிரதமர் மோடி முகமது பின் துக்ளக் மன்னர் மற்றும் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் ஆகியோரையும் மிஞ்சியுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்திய அரசியல் சாசன வழங்கியுள்ள உரிமைகளைப் பறித்து விட்டார்.
எனவே, ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். அரசின் இந்த நடவடிக்கையால் கடைகள், சந்தைகள், விவசாய நடவடிக்கைகள் பெரிய அளவில் முடக்கிப் போட்டுவிட்டது.
பாஜக எம்பிக்களும், எம்எல்ஏக்களும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிடுமாறு மோடி கட்டளையிட்டுள்ளார். ஆனால் இந்த நடவடிக்கையை முதலில் அவர் தன்னிடம் இருந்து தொடங்க வேண்டும். பாஜக தலைவர் அமித் ஷாவிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்படிச் செய்ய மோடி தயாரா?
ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பதற்கு கொஞ்சம் நேரம் முன்பாக பாஜகவின் பெயரிலும் அதன் தலைவர் பெயரிலும் ஏராளமான சொத்துகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு, பிகாரில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புடைய நிலங்களை பாஜக வாங்கியுள்ளது.
ஆக, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. இது ஒரு கருப்பு அவசரநிலையாகும்.
பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் ஆகியவற்றின் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்து விட்டு, பிரதமர் மோடி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றார். அடுத்து வரும் தினங்களில், மக்களின் நிலங்கள் மற்றும் வீடுகளைப் பறிப்பதற்கும் மோடி தயாராகி விட்டார்.
மத்திய அரசுக்கு எதிரான இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். மக்கள் இயக்கமாக இதனை சாதாரண மக்கள் மாற்ற வேண்டும். நரேந்திர மோடியால் நாட்டின் சுதந்திரம் பறிபோய்விட்டது. மக்கள் இதனை இன்னுமொரு சுதந்திரம் போராட்டமாக கருதி போராட வேண்டும் என்று மம்தா கூறினார்.












Click it and Unblock the Notifications