ஆக்ராவில் மோடி கூட்டம்: முசாபர்நகர் கலவரத்தை தூண்டிவிட்ட எம்.எல்.ஏக்களுக்கு பாராட்டு!
ஆக்ரா: முசாபர்நகர் கலவரத்தை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆக்ராவில் நடைபெற்ற மோடி பொதுக்கூட்டத்தில் கெளரவப்படுத்தப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நரில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு 49 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
இந்த மோதலை தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் சங்கீத் சோம், சுரேஷ் ரானா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் உள்ளூர் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். ஜாமீனில் வெளிவந்த இருவரும் ஆக்ராவில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படுவர் என்று பாஜக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஆக்ராவில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் பொதுக்கூட்டத்தில் இரு எம்.எல்.ஏக்களும் சிறப்பிக்கப்பட்டனர். ஆனால் அப்போது மோடி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.