ஆர்கே நகர் இடைத்தேர்தல் எப்போ தெரியுமா? தீயா வேலை செய்யும் தேர்தல் ஆணையம்.. எதுக்கு?
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது.
பொதுவாக காலியாகும் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நாடுமுழுவதும் காலியாக உள்ள தொகுதிகள்
நாடுமுழுவதும் ஆர்.கே.நகர் உள்பட 12 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. நாடாளுமன்ற தொகுதிகளை பொறுத்தவரை, காஷ்மீர் மாநிலம் அனந்தநாக், ஸ்ரீநகர், கேரள மாநிலம் மலப்புரம் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன.

ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிப்பு
மேற்கண்ட 12 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை ஓரிரு நாளில் தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் இவற்றுக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

முடிவடையும் பதவிக்காலம்
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதி முடிவடைகிறது. எனவே, அதற்குள் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஓட்டு
ஜனாதிபதி தேர்தலில், நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளின் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போடுவார்கள். அந்தவகையில், 776 எம்.பி.க்களும், 4 ஆயிரத்து 120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போட தகுதி உடையவர்கள் ஆவர்.

தீயா வேலை செய்யும் தேர்தல் ஆணையம்
மேற்கண்ட அனைவரும் ஓட்டு போடும்வகையில், எந்த காலியிடமும் இருக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. எனவே, அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தி, காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications