ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன்? 29 பக்க அறிக்கையில் தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்
அரசியல் சட்டம் 324வது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்டிருந்தது. தேர்தல் நடத்த உகந்த சூழல் உருவாகும் போது தேர்தல் நடத்தப்
டெல்லி: நூதன வழியில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் தொகுதிில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பண பட்டுவாடாவால்தான் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அதில் கூறியுள்ளதாவது: ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை. தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முறைகேடுகளை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 21ல் தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது.
எனவே, அரசியல் சட்டம் 324வது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதற்குமுன் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்டிருந்தது. தேர்தல் நடத்த உகந்த சூழல் உருவாகும் போது தேர்தல் நடத்தப்படும்.
இந்த பணப்பட்டுவாடாவில், அமைச்சர் விஜய பாஸ்கருக்கு பெரும் பங்கு உள்ளது தெரியவந்துள்ளது. விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.89 கோடிக்கு ஆவணங்கள் சிக்கின. விஜயபாஸ்கரின் நெருக்கமானவர்களின் வீடுகளில் ரூ.5 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. விடுதியில் வார்டு வாரியாக பணம் விநியோகிக்கப்பட்ட பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது. யார் யாருக்கெல்லாம் எவ்வளவு பணம் வழங்க வேண்டும் என்ற பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொகுதியில், கடந்த 7 ம் தேதி வரை 18 லட்சத்து 80 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த மொபைல், டிசர்ட், வெள்ளி தட்டு. புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications