இனி ராபர்ட் வாத்ரா ஏர்போர்ட்டில் 'விஸ்க்குன்னு' வந்து போக முடியாது
டெல்லி: விமான நிலையங்களில் சோதனை செய்யப்படாமல் செல்வோரின் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் பெயரை நீக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையங்களில் நடக்கும் பல அடுக்கு சோதனைகளுக்கு உட்படாமல் செல்வோரின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் பெயர் உள்ளது. இந்நிலையில் அந்த பட்டியலில் இருந்து வாத்ராவின் பெயர் நீக்கப்படக்கூடும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான உத்தரவை வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்கும் பாஜக தலைமையிலான அரசு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையங்களில் சோதனைக்குட்படாமல் செல்லும் சாதாரன மனிதர் ராபர்ட் வாத்ரா மட்டுமே. அவரது பெயரை சோதனைக்குட்படாமல் செல்வோரின் பட்டியலில் சேர்க்கும் முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்தது.
தேர்தல் பிரச்சாரங்களில் கூட விமான நிலையங்களில் வாத்ராவை ஏன் சோதனை செய்வது இல்லை என்று தான் பாஜக கேட்டு வந்தது. மேலும் மேடைதோறும் வாத்ராவின் நில ஊழல் குறித்தும் பாஜக தாக்கி பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.