செய்தியாளரின் மைக்கைத் தட்டி விட்டு "பைத்தியக்காரத்தனமாக" நடந்து கொண்ட ராபர்ட் வதேரா!
டெல்லி: ஹரியானாவில் நடந்த சர்ச்சைக்குரிய வகையில் நிலங்களை வாங்கிய விவகாரம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர் மீது கோபத்தைக் காட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, செய்தியாளரின் மைக்கைத் தட்டி விட்டும், உனக்கு என்ன பைத்தியமா என்றும் கோபத்துடன் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் வதேரா பல்வேறு நிலங்களை வாங்கியதில் பெருமளவில் அதிகாரதுஷ்பிரோகம் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வந்தது. தற்போது பாஜக ஹரியானால் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல் வேலையாக வதேரா சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி அசோகா ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு வதேரா வந்திருந்தார். அப்போது அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைக் கேட்டு கோபமடைந்த வதேரா, செய்தியாளரைப் பார்த்து, 'ஆர் யூ சீரியஸ்' என்று திருப்பித் திருப்பி சில முறை, (நடிகர் ரகுவரன் ஒரு படத்தில் ஐ நோ.. ஐ நோ என்று சொல்வதைப் போல) கேட்டார். பின்னர் மைக்கைத் தட்டி விட்டு விட்டுப் போனார்.
போனவர் மீண்டும் செய்தியாளரை நோக்கி அடிக்க வருவதைப் போல வந்தார். நீ என்ன பைத்தியமா என்றும் கத்தியபடி கேட்டார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து அமைதிப்படுத்தி அழைத்துச் சென்றனர்.