டெல்லி பல்கலை.யில் அனைத்து மாணவர் சேர்க்கை ஒத்திவைப்பு!!
டெல்லி: 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு பல்கலைக் கழக மானியக் குழுவான யுசிஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக் கழகத்துக்குட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் 4ஆண்டு இளங்கலை பட்டபடிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருமே இந்த 4 ஆண்டுகால இளங்கலை பட்டப்படிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டும் வருகின்றன. இதையெல்லாம் டெல்லி பல்கலைக் கழக நிர்வாகம் கண்டுகொள்வதாகவும் இல்லை. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடப்பாண்டுக்கான 4 ஆண்டுகால இளங்கலை பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டது டெல்லி பல்கலைக் கழகம்.
யுசிஜி அதிரடி உத்தரவு
இந்த நிலையில்தான் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழான 64 கல்லூரிகளில் 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முறையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவான யுசிஜி அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
கடும் நடவடிக்கை
அத்துடன் முந்தைய முறைப்படியே 3 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தின் கீழ்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை நிறுத்தல் -மாணவர்கள் பரிதவிப்பு
யுசிஜியின் உத்தரவால் டெல்லி பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மாணவர் சேர்க்கையை ஒத்திவைத்துள்ளன. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
இதனிடையே டெல்லி பல்கலைக் கழகத்துக்கு எதிராக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சம் முன்பாக பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். உடனடியாக 4 ஆண்டுகால பட்டப்படிப்பு முறையை டெல்லி பல்கலைக்கழகம் திரும்பபெற வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.
தலையீடு இல்லை- ஸ்மிருதி இரானி
இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியோ, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் யுஜிசி இடையிலான விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்றார்.
காங்கிரஸ் கேள்வி
இதனிடையே டெல்லி பல்கலைக்கழகம், 4 ஆண்டுகால பட்டப்படிப்பை கொண்டுவர முற்பட்டபோது யுஜிசி ஏன் அமைதியாக இருந்தது? யுஜிசி தனது கருத்தை ஏன் தெரிவிக்கவில்லை? 4 ஆண்டுகால பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்த போது யுஜிசி அறிவுரை வழங்காதது ஏன்? யுஜிசி பலிகடா ஆக்கப்படுகிறதா? மாணவர்களின் நிலை என்ன? என்று காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications