பத்மநாபசுவாமி கோவிலில் 'பி' ரகசிய அறையை திறக்க விடமாட்டோம்: மன்னர் குடும்பம் கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷம் உள்ள பி ரகசிய அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இந்த கோவிலில் உள்ள ஏ முதல் எப் வரை உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. இதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கிடைத்துள்ளன.
ஆனால் 'பி' அறையை திறக்கக்கூடாது என்றும், இந்த 'பி' நிலவறை 100 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை என்றும், இந்த நிலவறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து இதுவரை 'பி' அறை மட்டும் திறக்கப்படாமல் இருந்தது.
பி அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு வழக்கறிஞரான கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சந்திராசூட் ஆகியோர் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் நிர்வாகத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே திறக்கப்படாமல் இருக்கும் 'பி' அறையை திறந்து அதிலுள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறினர்.
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருடன் சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தி 'பி' அறையை திறந்து நகைகளை கணக்கிட வேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பி அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த அறை திறக்கப்பட்டால் கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று தெரிவித்துள்ளனர்.