சிறையில் சசிகலாவுக்கு சவுகரியம் செய்ய ரூ. 2 கோடி லஞ்சம்: புகழேந்தியிடம் 2 மணிநேரம் விசாரணை
Recommended Video

பெங்களூர்: சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகள் செய்து கொடுக்க போலீசுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து அதிமுக நிர்வாகி புகழேந்தியிடம் ஊழல் தடுப்பு படை விசாரணை நடத்தியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அங்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா தெரிவித்தார்.

வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றும் ரூபா தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டகுழு விசாரணை நடத்தி கர்நாடக அரசிடம் அறிக்கையை சமர்பித்தது.
சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து விசாரித்த அந்த குழு ரூ. 2 கோடி லஞ்சம் குறித்து விசாரிக்கவில்லை. மாறாக லஞ்சப் புகார் பற்றி ஊழல் தடுப்பு படை விசாரணை நடத்த வேண்டும் எந்று அந்த குழு பரிந்துரை செய்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு படை போலீசார் சத்திய நாராயணராவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவின் ஆதரவாளரான புகழேந்திக்கு ஊழல் தடுப்பு படை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை. நேற்று காலை காலை தான் அவர் விசாரணைக்கு வந்தார்.
அவரிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் எப்பொழுது மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்று போலீசார் புகழேந்தியிடம் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications