ரியோ ஒலிம்பிக்: 6 வீராங்கனைகளுக்கு ரூ. 60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை... ஒடிசா அறிவிப்பு
புவனேஷ்வர்: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள ஒடிசா வீராங்கனைகளுக்கு ரூ. 60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
அடுத்தமாதம் 5ம் தேதி பிரேசிலில் ரியோ டீ ஜெனிரோ நகரில் தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள். இதில் இந்தியாவின் சார்பில் சுமார் 121 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்களில் 6 பேர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகள்.
இந்நிலையில், இந்த ஆறு பேருக்கும் தலா ரூ. 10 லட்சம் என்ற வீதத்தில் மொத்தம் ரூ. 60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இந்தத் தொகையானது சம்பந்தப்பட்ட வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நிச்சயம் இவர்கள் வெற்றிக் கனியைப் பறிந்து, ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்துவார்கள் என நம்புவதாகவும் நவீன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ஒடிசா அரசின் சிறப்பு ஊக்கத்தொகையை பெற உள்ள வீராங்கனைகளின் பெயர் விபரமாவது:
ஸ்ரபானி நந்தா, டுட்டீ சந்த் (ஓட்டப்பந்தயம்), தீப் கிரேஸ் எக்கா, நமிதா தோப்போ, லிலிமா மின்ஸ், சுனிதா லக்ரா (பெண்கள் ஹாக்கி).