ஆர்.எஸ்.எஸ் ‘பலே’ திட்டம்.. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் - “வேற லெவல் கணக்கு”!
நாக்பூர்: நாக்பூர் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முக்கிய பொறுப்பு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து அதிகமானோரை ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களாக இயக்கத்திற்கு ஈர்க்க ஆர்.எஸ்.எஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்க்க, வலுவான அடித்தளத்தை அமைக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோரமுகம் ஆர்.என்.ரவி! திடீர் அறிக்கை விட்ட கருணாஸ்! பாப்புலர் ஃபிரண்ட்-க்கு ஆதரவு!
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்
ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பு இந்துத்தவ கொள்கை கொண்டவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம். இந்த அமைப்புக்கு விஷ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தள், ஹிந்து முன்னணி, அகில பாரத வித்யார்த்தி போன்ற பல துணை அமைப்புகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கிளைதான் பா.ஜ.க. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தங்களை செயல்படுத்தும் வகையிலேயே ஆட்சி நடத்தி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் சாகா
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாகா எனும் பயிற்சி அணிவகுப்பு நடத்தி, தமது மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. 1926-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதல் சாகா நாக்பூரில் நடைபெற்றது. அந்த இடத்தில்தான் தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத வெறுப்பைத் தூண்டும் இந்தப் பயிற்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜனநாயக அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் எதிர்ப்பு
ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளன. இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும் போதெல்லாம் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்திருக்கிறது.
தற்போது தமிழகத்தில் பா.ஜ.க ஆழமாகக் காலூன்றத் திட்டமிட்டுள்ளதால் இங்கும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பெற்றவர்களை அதிகப்படுத்த ஆர்.எஸ்.எஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
நான்கு கட்ட பயிற்சி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில், நான்கு கட்டங்களாக பயிற்சி முகாம் நடத்தப்படும். ஆரம்ப நிலை பயிற்சி முகாம் மாவட்ட அளவிலும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள் மாநில அளவிலும் நடைபெறும்.
மூன்றாம் ஆண்டு அல்லது நான்காவது கட்ட பயிற்சி முகாம் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூரில் நடைபெறும். இரண்டாம் ஆண்டு முகாமை முடித்தவர்கள் மட்டுமே, நாக்பூரில் நடக்கும் மூன்றாம் ஆண்டு முகாமிற்கு செல்ல முடியும்.
நாக்பூர் முகாம்
இந்நிலையில், இந்த ஆண்டு நாக்பூரில் நடக்கும் பயிற்சி முகாமில் 735 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் 42 பேர் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்டுள்ளனர். இந்த முகாமில், தமிழகத்தில் இருந்து சென்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முகாமின் பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த பத்மகுமார் என்பவரும், உடற்பயிற்சி பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபு என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பரப்ப
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம், தமிழ்நாட்டிலிருந்து அதிகமானோரை இயக்கத்திற்கு ஈர்க்க முடியும் என ஆர்.எஸ்.எஸ் மேலிடம் நம்புகிறது.
வரும் காலங்களில் தமிழகத்தில் அதிக அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை உருவாக்கும் திட்டமும் நாக்பூர் தலைமையிடம் இருக்கிறதாம்.