ஆர்.எஸ்.எஸ். தலைமைஅலுவலகம், மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம், அதன் தலைவர் மோகன் பகவத்துக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
மோகன் பகவத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனையடுத்து அவருக்கும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கும் மகாராஷ்டிரா மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆனால் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓராண்டுக்கு முன்பே கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உள்துறை அமைச்சகம் தற்போது உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியை மகாராஷ்டிரா மாநில போலீசாரிடம் இருந்து இசட் பிளஸ் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஏற்றுள்ளனர்.
இவர்கள் மோகன் பகவத்தின் வீடு மற்றும் அவர் செல்லும் இடங்களுக்கு அதிநவீன ஆயுதங்களுடன் சென்று பாதுகாப்பு அளிப்பர்.