சிறையில் தொடர்ந்து சலுகைகள் அனுபவித்து வரும் சசிகலா... பார்வையாளர்களை சந்திப்பதில் அத்துமீறல்
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர்கள் அவ்வப்போது சந்தித்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கிடைத்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: சிறை கைதிகளை பார்வையாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க வேண்டும் என்ற விதியை பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா மீறியுள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசியும், இளவரசியும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா சிறையில் சலுகைகளை அனுபவித்து வருவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. சசிகலாவுக்கு 5 அறைகள் இருப்பதும், தனியே சமையலறை இருப்பதும் இதற்காக அவர் சிறைத் துறை ஏடிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா புகார் கூறியிருந்தார்.

வீடியோ காட்சிகள்
இதை விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்தது. அதில் சசிகலா சலுகைகளை பெற்றது உண்மை என்று தெரியவந்தது. மேலும் அவரும் இளவரசியும் சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. சிறையில் உள்ள சசிகலாவை யாரெல்லாம் சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்டிஐ மூலம் கேட்டு பெற்றது. இதற்கு சிறைத் துறை அதிகாரிகள் சில தகவல்களை கொடுத்துள்ளனர்.

விதிமீறல்
அதில் கடந்த 26.4. 2017-இல் விவேக் ஜெயராமனும் அவருடைய மனைவியும் இளவரசியை சந்தித்துள்ளனர். இதை தொடர்ந்து மே 6 2017-இல் கிட்டதட்ட 10 நாட்களில் மீண்டும் இளவரசியை விவேக் சந்தித்துள்ளார். தண்டனை கைதிகளை 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடியும் என்ற விதியை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்திப்பு
அதுபோல் 12.5.2017-இல் சசிகலாவை அவரது வழக்கறிஞர் அசோகன் சந்தித்துள்ளார். பின்னர் 10 நாட்கள் இடைவெளியில் அதாவது மே 22-ஆம் தேதி அசோகன் , சசிகலாவை மீண்டும் சந்தித்துள்ளார். அதுபோல் சசிகலாவை அவரது அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரு நாட்கள் சந்தித்துள்ளார். அதன்பின்னர் பிப்ரவரி 18, 20, 23, 28, மார்ச் 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு நாள் விட்டு மறு நாளோ அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையோ பார்வையாளர்களை அவர் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.

டிடிவி தினகரன் சந்திப்பு
கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் வெற்றி பெற்ற தினகரன் டிசம்பர் 28-ஆம் தேதி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். அப்போது அங்குள்ள பதிவேட்டில் அவர்கள் சந்தித்தாக குறிப்பிட்டிருந்த நேரம் பிற்பகல் 12.10 முதல் 12.55 வரை மட்டுமே. ஆனால் ஆங்கில ஊடகத்தின் நிருபர் கிட்டதட்ட 45 நிமிடங்கள் சசிகலாவும் தினகரனும் சந்தித்தனர் என்று பதிவேடு கூறும்போது அவர் சிறை வளாகத்தில் 3 மணி நேரமாக உள்ளே இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறையில் விதிமீறல் இல்லை
இதற்கு தினகரன் கூறுகையில் பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று சசிகலாவை சந்திப்போம். ஒருவர் பார்த்துவிட்டு வந்து காத்திருப்பு அறையில் காத்திருப்பர். இதுபோல் ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்துவிட்டு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வருவோம். எனவே சசிகலாவை சிறைத் துறை விதிகளுக்குட்பட்டே சந்தித்தோம். காத்திருக்கும் நேரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விளக்கமளித்துள்ளார். எனினும் குறுகிய நாட்களில் சசிகலாவை பார்வையாளர்களையும், வழக்கறிஞர்களையும் சந்தித்துள்ளது விதிகளை மீறிய செயலாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications