குடியரசு தின விழாவில் ஒபாமா: அணிவகுப்பில் ரஷ்ய விமானங்கள்
டெல்லி: செங்கோட்டையில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது ரஷ்யா அளித்த டேங்குள் அணிவகுத்த போதிலும் இந்தியாவுக்கு அதிகம் ஆயுதங்கள் வழங்கும் நாடு அமெரிக்கா தான்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றார்.
குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த அணிவகுப்பை ஒபாமா பார்வையிட்டார். அப்போது ரஷ்யா இந்தியாவுக்கு அளித்த எம்ஐஜி-39 ரக போர் விமானங்கள், சுகோய் - 30 விமானங்கள் அணிவகுத்து சென்றன. அதே சமய்ம் எம்.ஐ.ஜி.களுக்கு அருகே அமெரிக்கா அளித்த பி-81 பொசைடான் விமானமும் இருந்தது. இத்தனை காலமாக ரஷ்யா தான் இந்தியாவுக்கு அதிக அளவில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்கின. ஆனால் தற்போது ரஷ்யாவின் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது.
அமெரிக்கா
2011-2012 மற்றும் 2013-2014ம் ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து ரூ.32 ஆயிரத்து 615 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியுள்ளது என்று ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 364 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியுள்ளது.
ஆயுதங்கள்
1951-1952ம் ஆண்டில் இருந்தே இந்தியா அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கி வருகிறது. 1951-1952ம் ஆண்டில் அமெரிக்கா சுமார் 200 பயன்படுத்தப்பட்ட எம்-4 ஷெர்மன் டேங்குகளை இந்தியாவுக்கு வழங்கியது. 1962ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே போர் நடந்த பிறகு அமெரிக்கா இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது கிட்டத்தட்டநின்றுவிட்டது. ஒரு சில ஆயுதங்களை மட்டும் வழங்கி வந்தது.
ரஷ்யா
அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியபோது தான் இந்தியா சோவியத் யூனியனின் உதவியை நாடியது. 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது அதிகரித்தது. 2005ம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு குறித்த ஒப்பந்தத்தில் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அதிபர் புஷ்ஷும் கையெழுத்திட்டனர். அதன் பிறகு ரூ. 61 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியுள்ளது.
லாக்ஹீட் மார்டின்
அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கிய அதிநவீன விமானங்களில் ரூ.6, 100 கோடி மதிப்புள்ள 6 லாக்ஹீட் மார்டின் சி-130 விமானம், ரூ.25 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள பத்து சி-17ஏ குளோப்மாஸ்டர்- 3 விமானங்கள் அடக்கம். மேலும் 8 பொசைடன் கண்காணிப்பு விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. ரூ. 12 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள அந்த விமானங்கள் கடற்பகுதியை கண்காணிக்க பயன்படுத்தப்படும்.
பாகங்கள்
இந்தியா பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள், விமானங்களை மொத்தமாக வாங்கும் அல்லது பாகங்களாக வாங்கும். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் இலகு ரக விமானமான தேஜாஸுக்கு எப்-404 என்ஜின்களை வழங்கியது. மேம்படுத்தப்பட்ட தேஜாஸ் மார்க் II விமானத்திலும் ஜெனரல் எலக்ட்ரிக்கின் என்ஜின் தான் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தியா
உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்பதால் அதை அமெரிக்காவால் நிராகரிக்க முடியவில்லை.