மகரஜோதி: சபரிமலை ஐயப்பன் ஜோதியாக காட்சி தரும் 'பொன்னம்பல மேடு'
பம்பை: சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக காட்சி தரும் இடம்தான் பொன்னம்பல மேடு. நடப்பாண்டில் மகரஜோதியை காண பொன்னம்பல மேட்டில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சபரிமலையில் மண்டலவிளக்கு பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் நாள்தோறும் 5,000 பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேநேரத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மகர ஜோதி நாளில் பொன்னம்பல மேட்டில் பக்தர்கள் குடில்கள் அமைத்து தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஐயப்ப பக்தர்கள் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியை பார்ப்பதை வாழ்நாள் பாக்கியமாக கருதுகின்றனர்.
இந்த மகரஜோதியை தரிசிப்பதற்கு ஏற்ப தங்களது யாத்திரை திட்டத்தை வகுத்துக் கொள்வர். அன்றைய நாளில் பொன்னம்பல மேட்டில் குடில்கள் அமைத்து தங்கவும் அனுமதிக்கப்படுவர். பொன்னம்பல மேட்டில் ஜோதியை தரிசித்தவுடன் பக்தர்கள் யாத்திரையை நிறைவு செய்வர்.
இந்த பொன்னம்பல மேடு சபரிமலை சன்னிதானத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வனப்பகுதியில் பொற்கோவில் ஒன்று பூமிக்கு கீழே இருக்கிறது என்பது நம்பிக்கை. இதனடிப்படையில்தான் இந்த பகுதிக்கு பொன்னம்பல மேடு என அழைக்கப்படுகிறது.
தற்போது இப்பொன்னம்பல மேட்டில் ஒரு மேடை மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை முன்வைத்து பொன்னம்பல மேட்டுக்கு பல்வேறு புராண கதைகளும் உண்டு. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த முறை பொன்னம்பல மேடு செல்ல அன்று மகர ஜோதியை அருகில் தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் பக்தர்கள்.