இன்று சபரிமலை நடை திறப்பு: 18 படிகளுக்கு பிரதிஷ்டை
திருவனந்தபுரம்: சபரிமலை நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை காலை 18 படிகளுக்கு பிரதிஷ்டை நடக்கிறது. வரும் 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
இன்று மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். புதிதாக ஐம்பொன் பதிக்கப்பட்ட 18 படிகளில் சுத்தி கலச பூஜையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நடத்துவார். வேறு பூஜைகள் நடக்காது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை காலை 5 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் நடக்கும்.

பின்னர் 18 படிகளுக்கு பிரதிஷ்டை, கும்பாபிஷேக சடங்குகள் தொடங்கும். காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் பிரதிஷ்டை பூஜைகள், கும்பாபிஷேகத்தை தந்திரி நடத்துவார். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பின், ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கும். அன்று பூஜைகள் கிடையாது; இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
வரும் 18ம் தேதி காலை 5 மணிக்கு நடை திறந்து அபிஷேகத்துக்கு பின், நெய் அபிஷேகம் தொடங்கும். காலை 7.30 மணிக்கு உஷபூஜை நடக்கும். தொடர்ந்து, கார்த்திகை ௧ல் இருந்து ஒரு ஆண்டுக்கான மேல்சாந்தி தேர்வு நடக்கும். வரும் 22ம் தேதி வரை நடை திறந்திருக்கும். எல்லா நாட்களிலும் படிபூஜை, சகஸ்ர கலசம், களபாபிஷேக பூஜைகள் நடக்கும்.

வரும் 22ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். புதிய 18ஆம் படி பிரதிஷ்டை ஏற்ப்பாடுகளை தேவசம் போர்டு நிர்வாகம் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications