சுக்குநூறாக கிழித்து தீவைத்து எரிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்...விடாது 'கருப்பு'
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாக்குப் பை நிறைய கட்டுக் கட்டாக 500, 1000 ரூபாய் நோட்டு எரிந்த நிலையில் சிக்கியது.
பரேலி, உ.பி: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி நகரில் சாக்குப் பைகளில் எரிக்கப்பட்ட நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கின. இவை கருப்புப் பணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நேற்று முதல் நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இப்படி கட்டுக்கட்டாக பணம் எரிக்கப்பட்ட நிலையில் சிக்கியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பரேலியின் சிபி கஞ்ச் பகுதியில், பர்சா கேட் சாலையில் ஒரு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் சில சாக்குப் பைகளைக் கொண்டு வந்து தீவைத்து எரித்துள்ளனர். அந்தப் பைகளில் ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்துமே செல்லாது என அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுக்களாகும்.
அத்தனை நோட்டுக்களையும் மெனக்கெட்டு துண்டு துண்டாக வெட்டி பின்னர் அதை நன்றாக கிழித்து அதன் பின்னர் எரித்துள்ளனர் அந்த நிறுவன ஊழியர்கள். இந்த விவகாரம் பரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களைக் கைப்பற்றியுள்ள அதிகாரிகள், இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக பரேலி முதுநிலை எஸ்பி ஜோகிந்தர் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications