என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் தமது சகோதரர் தல்ஜித்சிங் கோஹ்லி இணைந்தது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங்கின் சகோதரர் தல்ஜித்சிங், அமிர்தசரஸில் நேற்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதற்கு மன்மோகன்சிங் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஆதரவாகவே இருக்கிறோம். தல்ஜித்சிங்கின் முடிவு வருத்தமளிக்கிறது. ஆனால் அது அவரது விருப்பம். மன்மோகன்சிங்கால் எங்களுக்குத்தான் பெருமை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் தமது சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து மன்மோகன்சிங்கும் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், பாஜகவில் தல்ஜித்சிங் இணைந்தது வருத்தமளிக்கிறது. இருப்பினும் என் சகோதரர் உட்பட மற்றவர்கள் நடவடிக்கைகளை நான் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.