முசாபர்நகர் கலவர வழக்கு: பெண் சாமியார் சாத்வி பிராச்சி சரண்
டெல்லி: முசாபர்நகரில் 2013ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், விஹெச்பி அமைப்பை சேர்ந்த பெண் துறவி சாத்வி பிராச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.
உ.பி.மாநிலம் முசாபர்நகரில் 2013ம் ஆண்டு இந்து-முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் சாத்வி பிராச்சியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தடை உத்தரவை மீறியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, தவறான நோக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில் சாத்விக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக முசாபர்நகர் கோர்ட் இதற்கு முன்பு பிறப்பித்த உத்தரவுகளை சாத்வி கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, சாத்விக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது கோர்ட். இதையடுத்து இன்று சாத்வி கோர்ட்டில் சரணடைந்தார். அவருக்கு ரூ.20 ஆயிரம் பிணையம் பெற்றுக்கொண்டு ஜாமீன் வழங்கியது கோர்ட். இம்மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள அடுத்தகட்ட விசாரணைக்கு சாத்வி ஆஜராக கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.