குஜராத் கலவரத்திற்கு இனவாத இந்தியர்களே காரணம்: நடிகர் சல்மான் கானின் தந்தை
மும்பை: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் சல்மானின் கானின் தந்தையும், பிரபல திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான் இனவாத இந்தியர்களால் தான் குஜராத் கலவரம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சல்மான் கான் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த மகரசங்கராந்தி விழாவில் கலந்து கொண்டு பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியுடன் பட்டம் விட்டார். பட்டம் விட்ட போதிலும் தன்னுடைய ஆதரவு மோடிக்கு தான் என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சல்மான் கானின் தந்தையும் பிரபல பாலிவுட் திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான் மோடி, முஸ்லீகள் மற்றும் மீடியா என்ற புத்தகத்திற்கு அறிமுக உரை எழுதியுள்ளார்.
மது கிஷ்வார் என்பவர் எழுதிய அந்த நூலின் அறிமுக உரையில் சலீம் கான் மோடிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதுடன் அவரை முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்பது போன்ற இமேஜை மீடியாக்கள் தான் உருவாக்கியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குஜராத் கலவரத்திற்கும் இனவாத குணம் கொண்ட இந்தியர்களே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அந்த புத்தகத்தில் மோடி குஜராத்தை எப்படி கலவரமில்லா பூமியாக வைத்திருந்தார் என்றும், 2002ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க அவர் துரித நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலீமின் அறிமுக உரையில் கூறியிருப்பதாவது,
முஸ்லீம்களை அடக்கும் விதங்களை கண்டறியும் ஆய்வகமாக குஜராத்தை மோடி மாற்றியுள்ளார் என்று நமக்கு தவறான தகவல் ஏன் அளிக்கப்பட்டது என்று நாம் வியக்கலாம். மோடி தனது ஆட்சியின் துவக்கத்தில் இருந்தே முன்னேற்றத்திற்கு முக்கியத்தும் அளித்துள்ளார். அதிலும் குறிப்பாக பூகம்பத்திற்கு பிறகு குட்ச் பகுதியை மறுசீரமைக்கும் அவரது திட்டம் ஒரு உதாரணம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சலீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். என்னுடைய அனுபவங்கள் மற்றும் அமைதி, மன்னிப்பு மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவையே இடைவெளியை நிறப்பும் பாலம் என்ற ஹதீஸை வைத்தே அறிமுக உரை எழுதியுள்ளேன்.
அன்பும், அமைதியும் தான் வழிபாட்டில் சிறந்தவை, மன்னிப்பு தான் மிகச் சிறந்த நன்கொடை என்று ஹதீஸ் ஒன்று கூறுகிறது. நான் இஸ்லாத்தின் மீது அதிக பற்றும், நம்பிக்கையும் வைத்துள்ளவன். 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு இனவாத குணம் கொண்ட சராசரி இந்தியர்கள் தான் காரணம். நம் நாட்டில் கலவரங்கள் நடந்துள்ளன, நடக்கின்றன. மோடி பதவிக்கு வரும் முன்பும், அவர் பதவிக்கு வந்த பிறகும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடந்துள்ளன. அண்மையில் நடந்த முசாபர்நகர் கலவரத்திற்கு யார் காரணம்? இந்துக்களோ முஸ்லீம்களோ பெரும்பாலான இந்தியர்கள் தான் கலவரத்திற்கு காரணம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இனவாதத்தை வென்றால் அது தான் மிகப்பெரிய சாதனை ஆகும் என்றார்.