சனாதன தர்மத்தை ஒழிப்பது ராஜஸ்தான் கலாச்சாரத்தையே அழிப்பது.. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அட்டாக்!
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்கத் துடிப்பதாகவும், சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இந்த ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் முழு வேகத்தில் தேர்தல் பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மாநிலத்தை வளர்ச்சியில் இருந்து பின்னுக்கு தள்ளியுள்ளது. காங்கிரஸுக்கு ஊழலும், குடும்ப அரசியலும் மட்டுமே முக்கியம்.

மொத்த நாடே வளர்ச்சியை நோக்கி இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் நாடு வளர்ச்சியை எட்டும்போது ராஜஸ்தான் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதற்கு ராஜஸ்தானுக்கு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு தேவை. பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜஸ்தானில் குறைக்கப்படவில்லை. இங்கு பாஜக ஆட்சி ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தக் கூட்டணி கட்சித் தலைவர்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக மோசமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அம்மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்த காங்கிரஸ் தலைவரும் வாய் திறக்கவில்லை. ராஜஸ்தான் மக்கள் ஆட்சியில் அமர்த்திய காங்கிரஸின் உண்மை முகம் இதுதான். அதேபோல், தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள் நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம் காங்கிரஸ் கண்களை மூடிக்கொள்ளும்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வருவதை முழு நாடும் பார்த்துள்ளது. அவர்கள் சனாதனத்தை ஒழிக்க விரும்புகிறார்கள். சனாதன தர்மத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கலாச்சாரத்தை அழிப்பதாகும். ஊழலையும் குடும்ப ஆட்சியையும் விட அவர்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை." என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சில வாரங்களுக்கு சென்னையில் தமுஎகச சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போன்று ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு பாஜக, இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் செல்லும் இடங்களில் எல்லாம் இதுகுறித்துப் பேசி வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்திலும், சனாதன பேச்சு குறித்து விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications