ஆபாச வீடியோ விவகாரம்: ஆம்ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் கைது
டெல்லி: ஆபாச வீடியோவில் உள்ள பெண் புகார் அளித்ததையடுத்து, ஆம்ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் சரணடைய வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர்.
டெல்லி குழந்தைகள் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் சந்தீப் குமார் குறித்த ஆபாச சிடி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிடியில் அமைச்சர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும், புகைப்படங்களும் இருந்தது. ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் இந்த வீடியோ வெளியானது.

இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முதல்வர் கெஜ்ரிவால் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் அமைச்சரவையில் இருந்து சந்தீப்குமாரை நீக்கம் செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதனை அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் உடனடியாக அறிவித்தார். இதையடுத்து அவரை ஆம்ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், சந்தீப் குமார் தொடர்பான ஆபாச வீடியோவில் அவருடன் நெருக்கமாக இருக்கும் பெண் டெல்லி சுல்தான்புரி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டினார்.
அதன் அடிப்படையில் சந்தீப் குமார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி அறிந்த சந்தீப் குமார் டெல்லி புறநகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று சரணடைய வந்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications