சோலார் பேனல் ஊழல்: நடிகையுடன், மத்திய அமைச்சர், கேரள அமைச்சர்களுக்கு செக்ஸ் தொடர்பு இருந்ததாக புகார்
கொல்லம்: கேரளாவை பரபரப்பில் ஆழ்த்திய சூரிய சக்தித் தகடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான நடிகை சரிதா நாயருக்கும், முன்னாள் அமைச்சர் கே.பி.கணேஷ்குமார், மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால், கேரள அமைச்சர் ஏ.பி. அனில்குமார் ஆகியோருக்கு இடையே செக்ஸ் ரீதியான தொடர்புகள் இருந்ததாகவும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிஜூ ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் ஜேக்கப் மேத்யூ கூறியுள்ளார்.
மேலும் குற்றப் பிரிவு ஐஜி அஜீத் குமாரும், சரிகாவை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கொல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த வீடியோ காட்சிகளை மீடியாக்களிடம் வெளியிடுவது தொடர்பாக எனது கட்சிக்காரர் பிஜூவிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளேன். அது கிடைத்ததும் இந்த வீடியோ ஆதாரங்களை நான் வெளியிடுவேன்.
இந்த வீடியோவில், சரிதாவுடன் நான் சொன்ன நான்கு பேரும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றனர். தேக்கடியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வைத்து சரிதாவுடன் நான்கு பேரும் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் டெல்லியில் உள்ள வேணுகோபாலின் நண்பர்கள் வீட்டிலும், கொச்சி போலீஸ் கமிஷனரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் வைத்து அட்டகாசம்
செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சிக்கியவுடன் பிஜூ கோவைக்கு தப்பிச் சென்றார். அப்படிப் போவதற்கு முன்பு இந்த வீடியோ காட்சிகளின் நகலை என்னிடம் அளித்திருந்தார். இப்போது இதை நான் வெளியிடக் கூடாது என்று போலீஸ் தரப்பில் என்னை மிரட்டி வருகின்றனர்.
வரும் நாளில் இந்த சதிச் செயல் மற்றும் பாலியல் வக்கிரங்களுக்குப் பின்னால் உள்ள மேலும் பலரின் பெயர்களும் வெளி வரும் என்றார் அவர்.
வேணுகோபால் மறுப்பு
இந்த புகார்களை வேணுகோபால் மறுத்துள்ளார். அதேபோல அனில்குமாரும் மறுத்துள்ளார். மேலும் மேத்யூ மற்றும் இதே புகாரை முன்பு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும், இந்தப் புகாரை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விட்டுள்ளார். அதேபோல அஜீத்குமார், தான் மேத்யூ மீது வழக்குத் தொடரப் போவதாக கூறியுள்ளார்.