என் மீது புகார் தெரிவித்திருப்பவர்கள்தான் என்னை முன்மொழிந்தனர்.. தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில்
பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு: பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சசிகலா கையெழுத்திட்ட கடிதத்தை அவரது வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஓபிஎஸ் அணி அதிமுக எம்பிக்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு உத்தரவிட்டது.
ஆனால் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரால் நியமிக்கப்பட்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்தார். டிடிவி தினகரனின் பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
எந்த அதிகாரப் பதவியிலும் இல்லாத ஒரு நபர் அளிக்கும் விளக்கத்தை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நோட்டிஸ்க்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
சசிகலா கையெழுத்திட்ட 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை அவரது வழக்கறிஞர்கள் ராஜேஷ்குமார் மற்றும் பரணிகுமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இன்று ஒப்படைத்தனர். அதில் தன் மீது புகார் தெரிவித்திருப்பவர்கள்தான் தன்னை பொதுச்செயலாளராக முன்மொழிந்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.