சிறையில் அடைத்தது முதலே இதே வேலை.. தொடர்ந்து விதிமுறைகளை வளைக்கும் சசிகலா
பெங்களூர்: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விஷயத்தில் பெங்களூர் சிறை அதிகாரிகள் தொடர்ந்து தவறு இழைத்து வருகிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 14ம் தேதி முதல் இவர்கள் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அதிகாரிகள் துணையோடு சசிகலாவுக்காக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
சலுகை மழை
வெளியில் இருந்து உணவு கொண்டு செல்வது, அதிகப்படியான பார்வையாளர்களை அனுமதித்தது, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் சிறைக்குள் பார்வையாளர்களை அனுமதித்தது, உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாக ஆர்.டி.ஐ ஆர்வரல் நரசிம்ம மூர்த்தி கண்டுபிடித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்தார். இந்த செய்திகள் வந்த பிறகு, சிறைத்துறை நிர்வாகம் கெடுபிடிகளை அதிகரித்தது.
கொஞ்சகாலம்
ஆனால் இதெல்லாம் கொஞ்ச காலம்தான். நைசாக பிறகு, சிறை அதிகாரிகள் சசிகலா அன்டுகோவுக்கு சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்தனர். அதேநேரம், சில விஷயங்களில் மட்டும் ரூல்சை மதிப்பதை போல காட்டிக்கொண்டனர். அப்படியும் பெரும்பாலான விஷயங்களில் கோட்டை விட்டுள்ளனர்.
ஆர்.டி.ஐ தகவல்
மார்ச் 20 முதல் மே 31ம் தேதிவரையிலான சிறை நடவடிக்கை குறித்து நரசிம்ம மூர்த்தி ஆர்.டி.ஐ மூலம் சேகரித்த விவரங்கள் மீண்டும் வெளியானது. இந்த காலகட்டத்தில் சசிகலாவை 11 முறை வெளியிலிருந்து வந்த நபர்கள் சந்தித்துள்ளனர். இளவரசியை ஐந்து முறையும், சுதாகரனை இரு முறையும் சந்தித்துள்ளனர். விதிமுறைப்படி இந்த இரண்டரை மாத காலத்தில், சசிகலாவை 5 முறைதான் பார்வையாளர்கள் சந்திக்க அனுமதித்திருக்க வேண்டுமாம்.
சில விதிமுறைகள்
அதே நேரம் முதலில் கொடுத்த சலுகை போல, மாலை 6.40 மணியளவில் எல்லாம் சசிகலாவை சந்திக்க பார்வையாளர்களை அனுமதித்த நிலை மாற்றப்பட்டு, இப்போது மாலை 5 மணிக்குள்ளாக மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளனர் அதிகாரிகள். அதில் மட்டும் விதிமுறையை அவர்கள் பின்பற்றியுள்ளனராம். சசிகலா சாதாரண சிறை தண்டனை அனுபவிப்பதால் சிறைக்குள் அவர் எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பலம்
இந்த நிலையில் சசிகலாவுக்காக சிறப்பு கிச்சன் அமைத்து சுவையான பதார்த்தங்கள் பரிமாறப்பட்டு வந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது டிஐஜி ரூபா கொடுத்த அறிக்கையால் இது அம்பலமாகியுள்ளது. கஞ்சா நடமாட்டம் சிறைக்குள் இருந்துள்ளது. தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.