பரப்பன அக்ரஹாரா வந்தடைந்தார் சசிகலா.. நீதிமன்றத்தில் சரண்! சில நிமிடங்களில் சிறையில் அடைப்பு
10 வாகனங்கள் புடை சூழ சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சென்று சேர்ந்தார். இதையடுத்து கோர்ட்டில் சசிகலா சரணடைந்தார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் சசிகலா அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹாரா சென்று சேர்ந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.

சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்தனர். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். பிறகு ராமாவரத்தில் எம்.ஜிஆர். இல்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
மாலை 4.45 மணியளவில் சசிகலா, இளவரசி ஆகியோர் பயணித்த கார் ஒசூரை தொட்டது. 5 மணியளவில் கர்நாடக எல்லைக்குள் கார் நுழைந்தது. மாலை 5.15 மணியளவில் கார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை பகுதிக்கு வந்து சேர்ந்தது. 10 கார்கள் இவர்களது கார்களைப் பின் தொடர்ந்து வந்தன.

கோர்ட்டில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்னிலையில், சசிகலா சரணடைந்தார். ஆவணங்களை பரிசீலனை செய்துவிட்டு, அவரை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிடுவார் என கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இங்கு சிறப்பு நீதிமன்றம் இன்று செயல்படுகிறது. முன்னதாக மதியம் 3 மணியளவில் நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் சசிகலா மற்றும் இளவரசியை சிறையில் அடைக்க தேவையான ஆவணங்களை பார்வையிட்டு வந்தார். மேலும் மாலை 5 மணியளவில் சசிகலா கணவர் நடராஜன் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். ஃபார்ச்சூனர் காரில் அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அதிமுக எம்.பி தம்பிதுரையும் வருகை தந்தார்.












Click it and Unblock the Notifications