சசிகலா முதல்வர் ஆவாரா?.. வெங்கய்ய நாயுடு மனசுல இருப்பது இதுதான்!
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதல்வராக்கப்படுவாரா என்பது குறித்து வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதன் சர்ச்சை இன்னும் முடிவிற்கு வராத நிலையில், அவர் முதல்வர் ஆவது குறித்து பேசப்பட்டு வருகிறது. இது அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த 27ஆம் தேதிதான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. ஒரே வாரத்தில் மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இது சசிகலாவை முதல்வராக்குவதற்கான கூட்டம் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டது மற்றும் அவர் முதல்வராவது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளார். அது குறித்து சசிகலாவிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுமா என்று கேள்வியை செய்தியாளர் ஒருவர் வெங்கய்ய நாயுடுவிடம் எழுப்பினார்.
அதற்கு வெங்கய்ய நாயுடு, இது முழுக்க முழுக்க அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் அவர்களின் பொதுச் செயலாளர் யார் என்பதை நாங்கள் தீர்மானிப்பது இல்லை என்றும் பதில் அளித்தார். மேலும், அது அவர்களது உள்கட்சி பிரச்சினை என்றும் இதுகுறித்து அவர்களே முடிவு எடுத்துக் கொள்ளட்டும் என்றும் கூறினார். அதிமுகவின் சட்டத்திட்டப்படி சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அதுகுறித்து அதிமுகவினர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications