அபராத தொகை, ஓ.பி.எஸ்.ஸின் செக்மேட்: சிறையில் வக்கீல்களுடன் 3 மணிநேரம் சசி ஆலோசனை
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் அபராதத் தொகை கட்டுவது குறித்து 4 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவுடன் சசிகலா பெங்களூரு சிறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலா கேட்ட எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.

அபராதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசி உள்ளிட்ட மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை கண்டிப்பாக கட்ட வேண்டும்.

வழக்கறிஞர்கள்
சாதாரண உடையில் 4 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு நேற்று பெங்களூரு சிறைக்கு சென்றது. காலை 10.45 மணிக்கு சிறைக்குள் சென்ற அந்த குழு பிற்பகல் 1 மணிக்கு தான் வெளியே வந்தது.

சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் அபராத தொகையை கட்டுவது, தான் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி கொடுத்த புகாரில் தேர்தல் ஆணையம் தனக்கு எதிராக ஏதாவது முடிவு எடுத்தால் தினகரனை அந்த பதவிக்கு கொண்டு வரலாமா, வந்தால் பிரச்சனை ஏற்படுமா என்பது குறித்து சசிகலா வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினாராம்.

புதுமுகங்கள்
சசிகலாவை சந்தித்து பேச வழக்கறிஞர்கள் செந்தில் மற்றும் அசோகன் தான் அடிக்கடி பெங்களூரு செல்வார்கள். ஆனால் நேற்று சசிகலாவை சந்தித்த அனைவரும் புதுமுகங்கள். அந்த 4 பேருடன் மணிக்கணக்கில் ஆலோசனை நடத்திய சசிகலா சிறைக்கு வெளியே காத்திருந்த திருச்சியை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர்கள் ஜெயராமன் மற்றும் காமரஜை சந்திக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications