அநியாயமா இப்படி பண்ணிட்டீங்களே.. சசிகலாவை சபித்து சிறையில் குவியும் கடிதங்கள்!
பெங்களூர்: சசிகலாவை சபித்து மக்கள் பலரும் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கே கடிதங்கள் எழுதி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என குற்றம்சாட்டி இதுபோன்ற கடிதங்கள் வந்து குவிகின்றன என்கிறது பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வட்டாரங்கள்.
'Sasikala, Central Prison, Parappana Agrahara, Bangalore 560100' என்ற முகவரிக்கு இதுவரை சுமார் 100 கடிதங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்துள்ளனவாம்.
குற்றச்சாட்டு
பெரும்பாலான கடிதங்கள் ஜெயலலிதா மரணத்தோடு சசிகலாவை தொடர்புபடுத்தி வருகின்றனவாம். இது ஒரு திட்டமிட்ட கொலை என்று கடிதங்கள் பலவற்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாம்.
புறமுதுகு
"நீங்கள் எங்கள் தலைவியை கொலை செய்துவிட்டீர்கள். புறமுதுகில் குத்திவிட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கையையும், எல்லாவற்றையும் கொடுத்தவரை கொன்றுவிட்டீர்கள். உங்கள் கெட்ட செயலுக்காக வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவீர்கள்" என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கொஞ்சம், கொஞ்சமாக
"செய்த தப்புக்கு இஞ்ச், இஞ்ச்சாக கஷ்டப்படுவீர்கள்" என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாசிப்பதே இல்லை
ஆரம்ப காலங்களில் சசிகலா தனக்கு வரும் அனைத்து கடிதங்களையும் வாசிப்பாராம். ஏச்சு, பேச்சு அதிகரித்ததால் இப்போது இளவரசி படித்து பார்த்துவிட்டு கொடுக்கும் கடிதங்களை மட்டுமே படிக்கிறார் என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.