நானா கொலைகாரி? ஜெ.வின் அப்பல்லோ வீடியோவை வெளியிடுவேன்... இது சசிகலாவின் 'பெங்களூரு ஜெயில்' சபதம்
தம்மை கொலைகாரியாக சித்தரிக்கும் ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிடப் போவதாக சசிகலா கூறிவருகிறாராம்.
பெங்களூரு: ஜெயலலிதாவை கொன்ற கொலைகாரி என தம்மை விமர்சிக்கும் ஓபிஎஸ்-க்கு பதிலடி தரும் வகையில் அப்பல்லோ வீடியோவை வெளியிட சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு பேசுவார் என்பதால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

சசி கொந்தளிப்பு
இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டதும் கொந்தளித்த சசிகலா, எனக்கு கொலைகாரி பட்டம் கட்டிய ஓபிஎஸ்-க்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என ஆவேசப்பட்டிருக்கிறார்.

வேறவழியே இல்லை
அத்துடன் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை பார்த்தாலே அனைவரும் பதைபதைத்துவிடுவார்கள்.. அந்த கோலத்தில் மக்கள் ஜெயலலிதாவை யாரும் பார்க்க விரும்பமாட்டார்கள் என்பதற்காக தாம் பொறுமை காத்ததாகவும் இனியும் பொறுக்க முடியாது எனவும் கூறியிருக்கிறார் சசிகலா. இருப்பினும் நான் கொலைகாரி பட்டத்துடன் இருக்கவிரும்பவில்லை என்பதற்காகவே அந்த வீடியோவை ரிலீஸ் செய்யப் போகிறேன் எனவும் கூறியுள்ளார் சசிகலா.

நடராஜனிடம் வீடியோ
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கணவர் நடராஜனை உடனே தொடர்பு கொள்ளவும் தம்மை சந்தித்தவர்களிடமும் சசிகலா கூறியுள்ளார். நடராஜனிடம்தான் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோ இருக்கிறதாம்.

விவேக்குக்கு உத்தரவு
இந்த வீடியோ பதிவைப் பற்றிதான் திவாகரன் மகன் ஜெயானந்த் தமது ஃபேஸ்புக் பதிவிலும் போட்டிருந்தார். ஓபிஎஸ் தமக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தால் அதற்கு பதிலடியாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் விவேக்குக்கும் உத்தரவிட்டிருக்கிறாராம் சசிகலா.












Click it and Unblock the Notifications