கணவர் நடராஜனை பார்க்க சசிகலாவுக்கு இதுவரை பரோல் மனு தாக்கல் செய்யப்படவில்லை- வழக்கறிஞர்
கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு இதுவரை பரோல் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
பெங்களூர்: கவலைக்கிடமான வகையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு இதுவரை பரோல் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று வழக்கறிஞர் அசோகன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதையடுத்து உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கணவரை பார்க்க சசிகலா இன்று பரோல் கேட்டு மனு தாக்கல் செய்ததாகவும் அவருக்கு சிறை துறை பரோல் வழங்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பரோல் குறித்து சசிகலா தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து வழக்கறிஞர் அசோகன் கூறுகையில் சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாளில் மனு தாக்கல் செய்யப்படும்.
பரோல் பெறுவதில் சட்ட சிக்கல் உள்ளன. அவற்றை ஆலோசனை செய்து பரோல் மனு தாக்கல் செய்யப்படும்.
சிறைத் துறை அதிகாரிகளிடம் பரோல் குறித்து பேசி வருகிறோம். சசிகலா சார்பில் பரோல் கோரி தற்போது வரை மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றார் அசோகன்.