குற்றவாளிகள் சசிகலா உள்ளிட்டோர் சரணடைவது எப்போது? நடைமுறைகள் என்ன?
குற்றவாளிகளான சசிகலா உள்ளிட்டோர் இன்று இரவு சரணடைவது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. பெங்களூரு விசாரணை நீதிமன்றம் அறிவித்த பின்னரே மூவரும் சரணடையக் கூடும் என தெரிகிறது.
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்னமும் சரணடையவில்லை.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளிகள் என சசிகலா உள்ளிட்ட மூவரையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அத்துடன் மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் மூவரும் இன்னமும் சரணடையவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூவரும் உடனே சரணடைந்திருக்கலாம்; வேறு எந்த உத்தரவுக்கும் குற்றவாளிகள் காத்திருக்கத் தேவை இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது முறைப்படி பெங்களூரு விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு விவரத்தை பட்டியலிடும்.
இப்படி விசாரணை நீதிமன்றம் பட்டியலிட்ட பின்னரும் குற்றவாளிகள் சரணடையாவிட்டால் கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்படும். சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மூவரும் எப்போது சரணடைய வேண்டும் என எதையும் குறிப்பிடவில்லை.
அப்படி கால நிர்ணயம் செய்யப்படாததால்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் பெங்களூரு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் வரை காத்திருக்கலாம் என சசிகலா உள்ளிட்டோர் முடிவு செய்திருக்கலாம். விசாரணை நீதிமன்றம் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் இன்று இரவு சசிகலா சரணடைவது சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.