சரணடைய 4 வார கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்கிறது குற்றவாளிகள் சசி கோஷ்டி
உச்சநீதிமன்ற உத்தரவின்படி உடனே நீதிமன்றத்தில் சரணடையாத குற்றவாளிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கால அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
பெங்களூரு: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையாமல் உடல்நிலையை காரணம் காட்டி 4 வார கால அவகாசம் கோரி மனுத் தாக்கல் செய்ய குற்றவாளிகள் சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகியோர் திட்டமிட்டுளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்ட மூவரும் சரணடைந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை மூவரும் சரணடையவில்லை.
அத்துடன் உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய 4 வார கால அவகாசம் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யவும் மூவரும் திட்டமிட்டுள்ளனராம். அதேபோல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரியும் ஒரு மனுவை சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.
இந்த சீராய்வு மனுவும் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில்தான் விசாரணைக்கு வர உள்ளது.