ஜெ. சமாதியில் 3 முறை ஓங்கி அடித்து சபதம் செய்த சசிகலா.. சரணடைய பெங்களூர் புறப்பட்டார்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலர் சசிகலா பெங்களூர் கோர்ட்டில் சரணடைவதற்கு முன்பாக மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்துவிட்டு கிளம்பினார்.
பெங்களூர்: மாலை 4 மணி முதல் 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்.,
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் தர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று கூறிவிட்ட நிலையில், சசிகலா போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.
மாலை 4 மணி முதல் 5 மணிக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், இளவரசியும் ஒரே காரில் பயணித்த நிலையில், சுதாகரன் வேறு காரில் புறப்பட்டுள்ளார். முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து, தனதுவாய்க்குள் முணுமுணுத்தவாறு சபதம் செய்தார். தாயின் மீது ஆணை, ஓபிஎஸ், அவருக்கு பின்னணியில் உள்ள கட்சிகளை அழிப்பேன் என அவர் கூறி சபதம் செய்ததாக அருகேயிருந்தவர்கள் கூறுகிறார்கள்.
வீடியோ
#WATCH: #VKSasikala visits Jayalalithaa's memorial at Chennai's Marina Beach before heading to Bengaluru, pays floral tribute pic.twitter.com/1t8C150GKf
— ANI (@ANI_news) February 15, 2017
ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சத்தியம் செய்தபோது, சசிகலா மிகுந்த ஆக்ரோஷமாக காணப்பட்டார். சத்தியம் செய்த பிறகு, கையில் ஒட்டிய பூக்களை தட்டிவிட்டார்.
இதன்பிறகு, மாலையில், பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்ட மூவரும் வந்தவுடன் அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும். பின்னர் நீதிமன்றக் காவலில் இருந்து போலீஸ் காவலில் சசிகலா ஒப்படைக்கப்படுவார்.
இதையடுத்து ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு சசி கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. இங்குதான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு பிறகு 21 நாட்கள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப்பட்டிருந்தனர். அதேநேரம், பெங்களூர் சிறையில் சசிக்கு முதல் வகுப்பு சிறை கோரப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.