ஜல்லிக்கட்டு வழக்குகள் மீதான அனைத்து விசாரணையும் நவ. 9-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழக்குகள் மீதான அனைத்து விசாரணையும் நவம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இதனால் 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
2016-ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8-ந்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது.
ஆனால் இதை ரத்து செய்யக்கோரி விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்குக்கு ஜனவரி 14-ந்தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்தநிலையில் பிராணிகள் நல வாரியத்தின் உறுப்பினர் என்.ஜெயசிம்மா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜல்லிக்கட்டு தொடர்பான மனு மீதான விசாரணை முடியும் வரை பிராணிகள் நலவாரிய உறுப்பினர்களில் மாற்றம் எதுவும் செய்யக்கூடாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டவிதிகளில் மாற்றங்கள் எதுவும் செய்ய மத்திய அரசை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அனைத்து மனுக்களின் மீதான விசாரணை நவம்பர் மாதம் 9-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.
வருகிற 30-ந் தேதியன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுவின் மீதான இறுதி விசாரணையும் மற்ற மனுக்களுடன் சேர்த்து நவம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.