சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை எதிர்த்து சு.சுவாமி மனு- சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்பு
டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு(சிஎஸ்கே) 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணி சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் மற்றும் பல வீரர்கள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது பெரும் புயலைக் கிளப்பியது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

இக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் கொடுத்தது. இதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான மற்றொரு குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகாலம் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சி.எஸ்.கே. நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழு பிறப்பித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும் எனக் கூறி அந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து இத்தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்று அதற்கான தேதியை பின்னர் அறிவிப்பதாக தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி யுயு லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications