அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: நாடு முழுவதும் அகில இந்திய மருத்துவபடிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது.
அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு நடத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் ஆகியவை சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தன. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடாளுமன்றத்திலும் மத்திய அரசின் சீராய்வு மனுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது. அத்துடன் 2013-ம் ஆண்டு பொதுநுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மருத்துவ படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால் தமிழகத்தில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வரும் 69% இடஒதுக்கீட்டு முறை கேள்விக்குறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications