ஜல்லிக்கட்டு: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி- நவ. 16-க்கு ஒத்திவைப்பு!
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளில் காளைகளை அனுமதிக்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ந் தேதியி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கையை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா என்ற பிராணிகள் நல அமைப்பு ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடை விதித்தது. இதனால் இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இதனிடையே இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் ஆர்.எம்.கார்ப், துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா ஆகியோர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக அரசும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, காட்சிபடுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் இதற்கு முன்னர் எந்த மாதிரியான நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications