ஸாரி.. சீனிவாசனை மீண்டும் கிரிக்கெட் வாரியத் தலைவராக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் மீண்டும் தன்னை அமர்த்துமாறு கோரி தாக்கல் செய்திருந்த சீனிவாசனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
அதாவது ஐபிஎல் விவகாரம் அல்லாத பிற விவகாரங்களுக்கு மட்டுமாவது தன்னை தலைவராக நியமிக்க வேண்டும் என்று தனது அப்பீல் மனுவில் சீனிவாசன் கோரியிருந்தார். ஆனால் அக்கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
மார்ச் 27ம் தேதி உச்சநீதிமன்றம் சீனிவாசனை பதவியிலிருந்து ஓரம் கட்டி வைத்து உத்தரவிட்டது. ஐபிஎல் விவகாரங்களைக் கவனிக்கும் பிசிசிஐ தலைவராக கவாஸ்கரை கோர்ட் அறிவித்தது.

இதையடுத்து தன்னையே தலைவராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று சீனிவாசன் கோரி மனு செய்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டது. தற்போது 2வது முறையாக அவரது அப்பீல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தனது முந்தைய உத்தரவை மாற்ற விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதுதொடர்பான சீனிவாசனின் மனுவை விசாரித்த நீதிபதி பல்பீர் சிங் செளகான், இதற்கு முன்பு இதுதொடர்பாக உத்தரவிட்ட பெஞ்ச் முன்பு அப்பீல் செய்யுமாறும் சீனிவாசனின் வக்கீலுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து சீனிவாசனின் வழக்கறிஞர் இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், முந்தைய பென்ச்சின் அடுத்த வழக்கு அமர்வு செப்டம்பரில்தான் வருகிறது. அதற்குள் எனது பதவிக்காலமே முடிந்து விடும். எனவே பலன் இல்லாமல் போய் விடும். எனவே அவசர மனுவாக கருதி இதை விசாரிக்க வேண்டும் என்று அதில் சீனிவாசன் கோரியிருந்தார். ஆனால் அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது நடந்த சூதாட்டப் புகார்களில் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகியவை சிக்கின. இதில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைதும் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சீனிவாசனே ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். மேலும் விசாரணை முடியும் வரை தற்காலிகமாக தலைவர் பதவியிலிருந்தும் விலகியிருந்தார். பின்னர் அவர் நியமித்த விசாரணைக் குழு சீனிவாசன் உள்பட யாருமே தவறு செய்யவில்லை என்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.
இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் சீனிவாசனுக்குக் கடும் கண்டனம் தெரிவி்ததது. மேலும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டியையும் புதிதாக நியமித்தது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது முத்கல் கமிட்டி சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் சீனிவாசன் உள்பட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் சீனிவாசன் சிக்கல் பெரிதாகியுள்ளது.












Click it and Unblock the Notifications