சென்னை ஹைகோர்ட்டுக்கு மத்திய படை பாதுகாப்புக்கு எதிரான தமிழக அரசு மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்!
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் படையினர் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக ராணுவத்தையும் கூட பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் 14-ந்தேதி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அறைக்குள் புகுந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தாமாக முன் வந்து வழக்கை பதிவு செய்து விசாரித்தது.
இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு தேவையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், 6 மாத காலமாவது சோதனை அடிப்படையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும். இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச், நவம்பர் 16-ந் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; மத்திய பாதுகாப்புப் படைக்காக ரூ16 கோடியை மத்திய அரசுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டும். 7 நாட்களுக்குள் மத்திய அரசு கோருகிற டெபாசிட் தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும்; அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனு இன்று நீதிபதிகள் தாக்கூர், பிரபுல்ல சி பந்த் ஆகியோர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய படையினருக்கு மொழி புரியாது என்பது தமிழக அரசின் பிரச்சனை அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்துடன் செயல்படுவதை ஏற்க முடியாது.
நீதித்துறை எப்போதும் மரியாதையுடனும் விழிப்புடனும் செயல்படுவது மிகவும் அவசியம். மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையால் முடியாது போனால் ராணுவத்தை கூட பாதுகாப்புக்கு நிறுத்தலாம். ஆகையால் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைத் தொடர்ந்து வரும் 16-ந் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளனர்.