பிசிசிஐ விதிகளை "பட்டி டிங்கரிங்" பார்க்க 3 நபர் குழு அமைப்பு!
டெல்லி: ஓட்டை உடைசலான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளையும், சட்டத் திருத்தங்களையும் மறு ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக நிலை குலைய வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தற்போது உள்ள பிசிசிஐ சட்ட விதிகள் பெரும்பாலும், சட்டத்தின் பிடியிலிருந்தும், அரசின் பிடியிலிருந்தும், ஆர்டிஐ வரம்புக்குள் சிக்காத வகையிலும் மிகவும் சுயநலனுடன் கூடியதாக, மக்கள் விரோத விதிகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அரசுக்கும், சட்டத்திற்கும், மக்களுக்கும் கட்டுப்பட்டது கிரிக்கெட் வாரியம். அது சட்ட வரம்புக்குள் வராதது அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக இன்று கூறி விட்டது.
மேலும் வாரியத்தின் அத்தனை விதிகள், சட்ட திட்டங்கள், திருத்தங்கள மறு ஆய்வு செய்து பரிந்துரை அளிக்குமாறு 3 நபர் கமிட்டியை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தக் கமிட்டியின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பான், ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோரை பெஞ்ச் அறிவித்துள்ளது.
இந்தக் கமிட்டி இன்றிலிருந்து 6 மாதத்திற்குள் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டிடம் பரிந்துரைகளை அளிக்கும்.
வாரியத்தின் சட்டவிதிகள், தேவையில்லாதது, சட்டவிரோதமானது என்று எது இருந்தாலும் அதுகுறித்து மறு ஆய்வு செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை நீதிபதிகள் பிறப்பிக்கும்போது பிசிசிஐ ஒரு சொசைட்டி என்று அதன் வக்கீல்கள் சார்பில் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், சொசைட்டியாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறி விட்டனர்.