சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் வாதம்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்தே இன்று தமது வாதங்களை முன்வைக்க உள்ளார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இம்மனு மீதான இறுதிவாதத்தை முன்வைத்த ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) சட்டப்படி வழக்கை நடத்தவில்லை. வருமானவரி ஆவணங்களை பரிசீலிக்கவே இல்லை. ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர். ஆனால் போயஸ் தோட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இயங்கவில்லை. அப்படியான நிலையில் இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களா? பணப் பரிமாற்றம் நடந்ததா? விசாரணை நீதிமன்றம் ஆராய்ச்சி செய்திருப்பது அர்த்தமற்றது. ஆகையால் ஜெயலலிதா குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றார்.
அவர் தமது வாதங்களை கடந்த 7-ந் தேதி நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசும் ஜெயலலிதா தரப்பும் தம்முடைய வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.
இன்றைய விசாரணையின் போது சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பாக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்.
முன்னதாக கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தமது இறுதிவாதங்களை நிறைவு செய்தனர். இந்த வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் தம்முடைய இறுதிவாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்ற காரணமாக இருந்த திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக வாதத்தை முன்வைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications