கொளத்தூரில் வெற்றி பெற்றது செல்லாது வழக்கு.. ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் பெற்ற வெற்றி செல்லாது என்று அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: கொளத்தூர் தொகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த சைதை துரைசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மனு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளரும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.