காவிரி: தமிழகத்துக்கு ஏமாற்றம்... தண்ணீர் கோரி மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 63 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கோரும் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 63 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கோரும் மனுவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இதுதொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

தமிழக அரசு வாதம்
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி காவிரி விவகாரம் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக அரசு கோரிக்கையை முன்வைத்தது.

எழுத்துப்பூர்வ விசாரணை
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தெரிவிக்க பெறுவதற்காக உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

டெல்லியில் முகாம்
தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 63 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கோரி புதிய மனுவை தாக்கல் செய்வதற்காக தமிழக அரசைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் டெல்லியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் அதுகுறித்து மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

தமிழகத்துக்கு பின்னடைவு
இந்நிலையில் காவிரி நதி நீர் தொடர்பான இறுதி தீர்பபு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் புதிய மனுக்கள் எதையும் தாக்கல் செய்ய இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். இது தமிழகத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications