அருணாச்சலில் புதிய ஆட்சி அமைக்க தடை- தற்போதைய நிலையே நீடிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு!
டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடிக்கவும் 14 காங். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு புதிய அரசு ஒன்றை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.
அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பலம் இழந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இந்த களேபரங்களுக்குப் பின்னர் 26 எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்வர் நபம் துகியை ஆதரித்தனர்.
அதே நேரத்தில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் 34 ஆனது. இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 25-ந் தேதி அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு புதிய அரசு ஒன்றை அமைத்து ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டால் உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களில் இருந்து தப்பிக்க முடியும் என மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதற்கான பரிந்துரையை மத்திய அமைச்சரவை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் நாளை வரை தற்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும்; 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அங்கு அதிருப்தி காங்கிரசாரை கொண்டு புதிய அரசு அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications