ஜெ. சொத்துக் குவிப்புவழக்கு... அன்பழகன் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைக்கவேண்டும் என்ற அன்பழகன் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
அதேசமயம் மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 18-க்குள் விளக்கமளிக்குமாறு ஜெயலலிதாவுக்கும், கர்நாடக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதால், அவர்கள் வெளியில் இருந்தபடி வழக்கை நடத்தி வருகின்றனர். மேல்முறையீட்டு வழக்கில் உதவி செய்ய முன்வந்த திமுக-வின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீடு விசாரணை முறையாக நடக்காததால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அன்பழகன் மனு தள்ளுபடி
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், கோயல் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக்கோரும் மனு மீதான உத்தரவு வரும் வரையில், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வழங்க தடை விதிக்க வேண்டும் என்ற திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் இந்த கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அதேநேரத்தில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து மார்ச் 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி கர்நாடகா அரசுக்கும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நான்கு பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.