எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை ஏற்று செயல்பட்டால் என்ன?: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
டெல்லி: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மீது அதிக அளவு அவதூறு வழக்குகள் தொடரப்படுவது ஏன்? எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொண்டு செயல்பட்டால் என்ன? என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. மேலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் விசாரணைக்கான தடையை ஜனவரி 2-ந் தேதி வரை நீட்டித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மீது ஏராளமான அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் மீதான வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குகளில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் இருந்து மட்டுமே இவ்வளவு அவதூறு வழக்குகள் தொடரப்படுவது ஏன்? எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு ஒரு அரசு செயல்பட்டால்தான் என்ன? என்று தமிழக அரசை சாடினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு 2 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விஜயகாந்த் மீதான வழக்கின் விசாரணைக்கான தடையை ஜனவரி 2-ந் தேதி வரை நீட்டித்துள்ளது