விளையாட்டாக தூக்குப் போட்ட கல்லூரி மாணவி.. பெற்றோர் கண்முன்னே உயரிழந்த சோகம்
மைசூர்: பெற்றோர் கண்முன் விளையாட்டாக தூக்குப்போட்ட மாணவி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் மைசூர் சாலையில் உள்ள பாபுஜி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷின் மகள் கீர்த்தனா (18). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சமீபகாலமாக கீர்த்தனா கல்லூரி முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இதையடுத்து பெற்ரோர் கீர்த்தனாவை கண்டித்தனர். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டிற்கு வந்த கீர்த்தனா பெற்றோரை மிரட்டுவதாக கூறி, அவர்கள் கண்முன்னே விளையாட்டாக தூக்குப் போட்டிருக்கிறார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு இறுகிவிட்டதால் கீர்த்தனாவின் உயிரைப் பறித்து விட்டது. கீர்த்தனாவின் பெற்றோர்கள் உடனடியாக அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீர்த்தனாவின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக பயதராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.